மாறவர்மனின் சாகசம்
மாறவர்மனின் தைரியமும், இயற்கையாக பெற்ற பிறை மச்ச சக்தியை கொண்டு மாயக் கோட்டையின் மர்மத்தை அவிழ்த்து, துர்தேவதையை நல்ல தேவதை துணைகொண்டு வென்ற சாகசம்.
மாறவர்மனின் சாகசம்
மாயக் கோட்டையின் மர்மம்
அடர்ந்த காட்டுக்கு நடுவே, மூடுபனியால் மறைக்கப்பட்ட ஒரு பாழடைந்த கோட்டை இருந்தது. கிராமவாசிகள் அதைப் பற்றி பயத்துடன் பேசுவர். "அது மாயக் கோட்டை," என்று மூத்தவர்கள் கிசுகிசுப்பார்கள். "அங்கு சென்றவர் திரும்பியதில்லை. இரவில் அமானுஷ்ய ஒளி தோன்றும், பேய்களின் குரல்கள் எதிரொலிக்கும்." ஆனால், இளம் வீரன் மாறவர்மன் இந்தக் கதைகளை நம்பவில்லை. "எல்லாம் மூடநம்பிக்கை," என்று சிரித்தான். ஒரு பௌர்ணமி இரவில், தன் தைரியத்தை நிரூபிக்க, அவன் கோட்டைக்குச் செல்ல முடிவு செய்தான்.
பௌர்ணமியின் பயணம்
மாறவர்மன், வாளும் விளக்கும் எடுத்துக்கொண்டு, காட்டுப் பாதையில் நடந்தான். அவன் பௌர்ணமி அன்று பிறை மச்சத்துடன் பிறந்தவன் என்பது ஊரறிந்த உண்மை. இரவு அமைதியாக இருந்தது, ஆனால் காற்றில் ஒரு விசித்திரமான குளிர் கலந்திருந்தது. கோட்டையின் மாபெரும் இரும்பு வாசல், தானாகவே திறந்து மூடியது போல் ஒலி எழுப்பியது. உள்ளே நுழைந்தவுடன், ஒரு மின்னல் ஒளி தெரிந்தது. அது கோட்டையின் உயரமான கோபுரத்தில் இருந்து வந்தது. "இது என்ன மாயம்?" என்று மாறவர்மன் மனதில் எண்ணினான். மெதுவாகப் படிக்கட்டுகளில் ஏறினான். ஒவ்வொரு அடியிலும், அவனது நிழல் நீண்டு, சுவர்களில் விசித்திரமான உருவங்களை உருவாக்கியது.
கோபுரத்தின் மேல் மாடியில், ஒரு பழைய மரப்பெட்டி இருந்தது. அதைத் திறந்தபோது, ஒரு பளபளப்பான நீலக் கல் தெரிந்தது. அந்தக் கல் ஒளிர்ந்து, அறையை நீல ஒளியால் நிரப்பியது. திடீரென, ஒரு பயங்கரமான துர்தேவதையின் உருவம் தோன்றி, "இந்தக் கல்லை எடுத்தால், மரணத்தைச் சந்திப்பாய்!" என்று முழங்கியது. ஆனால், மாறவர்மன் அந்தக் குரலைப் பொருட்படுத்தாமல், கல்லை எடுத்தான். துர்தேவதை ஒரு மந்திரத்தை முனுமுனுத்தவாறே, "உன் தலை சுக்கு நூறாகச் சிதற வேண்டும்!" என்று கூறி, தன் கையை அவனை நோக்கி நீட்டியது. ஆனால், அது மாறவர்மனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்று பௌர்ணமி; மாறவர்மனின் பிறை மச்சத்தின் சக்தி அவனைப் பாதுகாத்தது. தைரியத்துடன் கல்லை எடுத்து, தன் பையில் வைத்தான். துர்தேவதை கோபத்தில் கத்தியது, ஆனால் அவனைத் தடுக்க முடியவில்லை.
துர்தேவதையின் சாபம்
மாறவர்மன் அந்த அற்புத நீலக் கல்லை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். "நம் மந்திர சக்தியால் இவனைக் கொல்ல முடியவில்லையே," என்று யோசித்தவாறு, துர்தேவதை அவனைப் பின் தொடர்ந்தது. மாறவர்மன் வாயிலைக் கடந்து வேகமாக வெளியே நடந்து சென்றான். பின்தொடர்ந்த துர்தேவதைக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. தன் மந்திரத்தால் இரும்புக் கம்பிகளால் ஆன சிறையை உருவாக்கி, மாறவர்மனைச் சிறைப்படுத்தியது. இதைச் சற்றும் எதிர்பாராத மாறவர்மனுக்கு ஒன்றும் புரியவில்லை. துர்தேவதை அவன் முன் தோன்றி, கலகலவெனச் சிரித்துவிட்டு, "இனி உன்னைக் கொல்வது எப்படி என்பதைத் தெரிந்துகொண்டு வந்து அதைச் செய்கிறேன்," என்று கூறி, அங்கிருந்து பறந்து சென்றது.
அன்று முழுவதும் சாப்பிடாததால், மாறவர்மனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. வெளியே, வாழை மரத்தில் வாழைப்பழங்கள் கொத்தாகத் தொங்கின. "கைகட்டி வாய் கேட்டது போல இருக்கிறது," என்று மாறவர்மன் நினைத்தவாறு, கம்பிக்கு வெளியே கைகளை நீட்டி, பழங்களைப் பறிக்க முயற்சித்தான். ஆனால், அது நடக்கவில்லை. பிறகு, தன் வாளை வெளியே நீட்டி, வாழைப்பழங்களை வெட்டி எடுக்க முயன்றான். அப்போது, மற்றொரு கையில் வைத்திருந்த அற்புத நீலக் கல், சிறைக் கம்பியில் இடித்து, எதிரே இருந்த சந்திர மலர் மீது விழுந்தது.
திடீரென, ஒரு அற்புத ஒளிவட்டம் தோன்றியது. வாழைப்பழங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டு, மாறவர்மன் ஆச்சரியமாக அந்த மலரை நோக்கினான். அந்த ஒளிவட்டத்தில் இருந்து குபுகுபுவெனப் புகை கிளம்பி, ஒரு அழகான தேவதை தோன்றினாள். "வீரனே, வணக்கம்! என்னை அந்தத் துர்தேவதை இந்தக் கல்லில் வசியப்படுத்தி அடைத்து வைத்திருந்தாள். இந்த சாபத்தை நீக்கும் சந்திர மலரில் கல் விழுந்ததால், நான் சாப விமோசனம் பெற்றேன். உன் அற்புத சக்தியை நீ அறியாதவனாக இருந்தாலும், உன் வீரத்தால், வரவிருக்கும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், அந்தக் கோட்டைக்குச் சென்று துர்தேவதையை எதிர்த்ததால், எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது," என்று கூறினாள்.
வீரத்தின் வெற்றி
அவள் கையை நீட்டி, இரும்புச் சிறையை உடனே மறையச் செய்தாள். அந்த நேரம், துர்தேவதை திரும்பி வந்து, சிறையில் இருந்து விடுபட்ட மாறவர்மனையும், கல்லிலிருந்து வெளிவந்த தேவதையையும் கண்டு, சற்று அஞ்சினாலும், உடனே எதிர்க்கத் தொடங்கினாள். தேவதையும் பதிலுக்கு மந்திரத்தால் தாக்க, சிறிது நேரம் அங்கு ஒரு மந்திரப் போர் நடந்தது. அந்தச் சமயம், மாறவர்மன் தயங்காமல் தன் வாளை எடுத்து, துர்தேவதையின் மார்பில் பாய்ச்சினான். வேறு யாராலும் மரணமடையாத நிலையில் இருந்த துர்தேவதை, மாறவர்மனின் அற்புத சக்தியால் தாக்கப்பட்டு இறந்தாள்.
நன்றி தெரிவிக்கும் விதமாக, தேவதை மாறவர்மனை கோட்டையின் ஒரு மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்த விலையுயர்ந்த பொக்கிஷங்களைப் பரிசாக அளித்தாள். "இவை உனக்கு உரியவை," என்று கூறி, அவள் ஒளியாக மறைந்தாள். மாறவர்மன் கிராமத்திற்குத் திரும்பியபோது, அவனை வீரனாக வரவேற்றனர். மாயக் கோட்டையின் சாபம் நீங்கியது. ஆனால், சில இரவுகளில், சந்திர மலர்களுக்கு மத்தியில் ஒரு மெல்லிய ஒளி தோன்றுவதாக கிராமவாசிகள் கூறுவர். அது தேவதையின் நன்றியா, அல்லது வேறு மர்மமா என்று யாருக்கும் தெரியவில்லை.
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

Comments
Post a Comment